Col. Ganesan Satcos-Tamil Web Pages



கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள் -
Col.(Retd.) P. Ganesan




அகத்தூண்டுதல்கள்


ஞாயிறு, 3 ஜூலை, 2016

மேகனா நதிக்கரையிலிருந்து.....

இந்தியத் திருநாட்டின் வங்காளம் என்ற பகுதி ஆங்கிலேயர் காலத்திலேயே இரண்டாகப் பிரிக்கப்பட்டு கிழக்கு வங்கம், மேற்கு வங்கம் என்றானதும் இந்தியா சுதந்திரம் பெற்ற பொழுது கிழக்கு வங்கம் பாகிஸ்தான் வசமாகி கிழக்கு பாகிஸ்தான் என்றானதும் நாம் அறிந்ததே.

கிழக்கு வங்கத்தின் வடக்குப் பகுதியில் இந்தியாவின் காசி,ஜெயந்தியா மலைப் பகுதி இருக்கிறது.இந்தப் பகுதியில் உருவாகும் நதிகள் மலைகளின் மேடு பள்ளத்தைப் பொறுத்து சில நதிகள் அஸ்ஸாம் பக்கமும் சில நதிகள் கிழக்கு பாகிஸ்தான் பக்கமும் பாய்கின்றன,

கிழக்குப் பாகிஸ்தான் பக்கம் பாயும் நதிகளில் மேகனா என்ற நதி குறிப்படத்தக்கது. உலகிலேயே அதிக மழை பெரும் சிரபுஞ்சி இந்தியாவின் மேகலாயா மாநிலத்தில் உள்ளது. இந்த மழை நீர் முழுவதும் வடிவது கிழக்கு வங்கத்தில் தான்.

1970-71 களில் இந்திய பாகிஸ்தான் உறவு மோசமாகி போர்கால சூழ்நிலை உருவான பொழுது கிழக்கு பாகிஸ்தான் அகதிகள் இந்திய பொருளாதாரத்தைப் பதிக்குமளவு இந்தியாவில் குவிந்தார்கள். அகதிகளைத் திரும்ப அனுப்பவேண்டிய சூழ்நிலையை இந்தியா உருவாக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

இந்நிலையில் ......
"பெண்ணை வரச்சொல்லுங்கள்"

அலங்காரப் பதுமையாக ,அழகே உருவாக "கோமதி" மெல்ல நடந்து வந்து எல்லோருக்கும் வணக்கம் சொன்னாள்.

தமிழ்நாட்டில் திருமணத்திற்குப் பெண் பார்க்கும் ஒரு சாதாரண நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. பெண்ணை எல்லோருக்கும் பிடித்துவிட்டது. மாப்பிள்ளை வரவில்லை.
பெண் வீட்டார் மாப்பிள்ளை பற்றி விவரம் கேட்க ஆரம்பித்தார்கள். மாப்பிள்ளை பொறியாளர் என்றீர்கள், சீருடை போட்டுருக்காரே, இராணுவ அதிகாரியா? பெண் வீட்டார் சற்றே கலவரத்துடன் கேட்டார்கள்.
மாப்பிள்ளையின் தந்தை தமிழாசிரியர் அழகியநம்பி சற்றே முன்வந்து விளக்குகிறார். ஐய்யா, என் மகன் மாணிக்கவாசகம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றவன்.இந்திய இராணுவத்தில் பொறியாளர் படைப்பிரிவில் அதிகாரியாக இருக்கிறான்.

இராணுவ அதிகாரி என்றால் போருக்கெல்லாம் போவரா?
தமிழாசிரியர் அழகியநம்பிக்கு அதற்குமேல் விவரம் சொல்ல முடியவில்லை.

மாப்பிள்ளை மாணிக்கவாசகம் எங்கே?

1971 ல் நடந்த இந்திய-பாகிஸ்தானிய போர் கிழக்கு பாகிஸ்தானைப் பொருத்தவரை ஒரு பொறியாளர் போர்.
மாப்பிள்ளை மாணிக்கவாசகம் அதாவது கேப்டன் மாணிக்கவாசகம் மேகனா நதிக்கரையில் .......
1970 ம் ஆண்டு ஒருங்கிணைந்த பாகிஸ்தானில் நடந்த தேர்தலில் கிழக்கு பாகிஸ்தானின் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் அவாமி லீக் கட்சி வெற்றி பெற்றிருந்தாலும் பாகிஸ்தானிய அதிபர் யாயாகான் அடக்கு முறையைப் பின் பற்றி கலவரத்தைக் கட்டவிழ்த்து விட்டார்.இதனால் முஜிபூர் ரஹ்மான் "சோனார் பங்களா" என்ற சுதந்திர நாட்டை 26 மார்ச் 1971ல் பிரகடனப் படித்தினார்.

அடக்கு முறையினால் கலவரம் வெடிக்க அகதிகள் கூட்டம் இந்தியாவிற்குள் நுழைந்தது.சரியான சமயம் பார்த்து இந்திய இராணுவத்தின் துணையுடன் அகதிகள் திரும்ப முயற்ச்சிக்க இந்திய-பாகிஸ்தான் போர் 01 டிசம்பர் 1971ல் ஆரம்பமானது.
கிழக்கு வங்க மக்கள் பாலங்களைத் தகர்த்து பாக்கிஸ்தான் இராணுவத்தை பல இடங்களில் முடக்கி விட்டனர்.

இந்திய இராணுவத்தின் பெருவாரியான பொறியாளர் படைப்பிரிவுகள் கிழக்கு பாகிஸ்த்தான் வந்தனர்.
போர்க்களம் என்பது ஒரு விசித்திரமான இடம்.பயம்,மகிழ்ச்சி,வினாடிக்கு வினாடி மாறும் உணர்வுகளின் போராட்டம்,துக்கம்,துயரம் , படுகாயம் மற்றும் மரணம் போரிடுபவர்கள் முகத்தில் மாறி மாறி விளையாடும் ஒரு ஆடுகளம்.
தீவிர நாட்டுப் பற்றும், வீரமும், உடல் மன வைராக்கியமும் நிறைந்தவர்கள் உணர்வுகளை மறைத்து நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயலாற்றும் சிவந்து கொண்டிருக்கும் பூமி.

கேப்டன் மாணிக்கவாசகம் போர்முனையில் இருக்கையில் ஒரு கடிதம் வருகிறது. அவனது தந்தை அவனுக்குப் பெண் பார்த்திருக்கும் விபரங்கள் எழுதி அவனது வேலை பற்றிய விளக்கமான செய்திகளைப் பெண் வீட்டாருக்குத் தெரிவிக்கும்படி எழுதியிருந்தார்.

மேகனா நதிக்கரையிலிருந்து மாணிக்கவாசகம் எழுதுகிறான்

இல்லறம் ஏற்க முன் வந்து நிற்கும் இனிய தோழியரே !

நான் கேப்டன் மாணிக்கவாசகம்.தங்கள் வீட்டில் நிகழ்ந்த சமீபத்திய நிகழ்வுகளினால் என்னைப்பற்றி அறிந்திருப்பீர்கள். பொறியாளர் என்றாலும் நான் ஒரு இராணுவ அதிகாரி. படைப்பிரிவுகளுடன் பணியாற்றுவது எனது கடமைகளில் ஒன்று.அதன் காரணமாகவே இன்று போர்க்களத்தில் நின்றுகொண்டிருக்கிறேன். அடுத்த வினாடி என்ன நடக்கும் என்பதை அனுமானிக்க முடியாத சூழ்நிலையில் நான் வருங்காலத்தைப்பற்றிப் பேச நினைப்பது தவறுதான்.

ஆனாலும் மாப்பிள்ளை என்று அறிமுகப்படுத்திய நிலையில் என்னைப் பற்றியும் எனது பணி, மற்றும் திட்டங்கள் பற்றியும் தாங்கள் தெரிந்து கொள்வது நல்லது என நினைக்கிறேன்.

செத்துப் பிறக்கும் குழந்தையை வெட்டிப் புதைக்கும் வீர பறம்பரை நாம்.

ஈன்று புறந்தருதல் என் தலைக்கு கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடனே;
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்கு கடனே;
ஒளிறுவாள் அருஞ்சமம் முறுக்கிக்
களிறு எரிந்து பெயர்தல் காளைக்கு கடனே;
இது போன்ற புறநானூறு,புறப்பொருள் வெண்பாமாலை பாடல்களை மிக இளம் வயதில் ஆர்வமுடன் பொருள் உணர்ந்து படித்து மகிழ்ந்ததினால் நான் இன்று ஒரு இராணுவ அதிகாரி.

இராணுவ அதிகாரிகள் திருமணத்தை எதிர் நோக்குவது பாவமில்லை. அவர்களை மணக்கும் பெண்களுக்கு இராணுவ வாழ்க்கையின் லாப நஷ்டங்களைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தால் வருத்தப் படுவதற்கு ஒன்றுமில்லை.
மரணம் ஒரு இயற்கை நிகழ்வு.பிறப்புக்குப்பின் இறப்பு என்பது எங்கு,எப்பொழுது எப்படி இயற்கையா.செயற்கையா என்பதை யாரும் முன்கூட்டியே நிச்சயிக்க முடியாது.
சுமார் 7-8 லட்சத்திற்கு மேல் இராணுவத்தினர் பங்கு கொள்ளும் இந்த பங்களாதேஷ் போரில் எவ்வளவு பேர் உயிரிழப்பார்கள் என்பதை யாரும் சொல்ல முடியாது.
நான் ஒரு கடமை தவறாத நேர்மையான உடலாலும் மனதாலும் உறுதியான இராணுவ அதிகாரி.இந்த இந்தியத் திருநாட்டை, எனது சக பணியாளர்களை உயிராக நேசிப்பவன்.
திருமணம் என்ற ஒன்று நடந்தால் எனது மனைவி,மக்களைக் கண்ணிலும் மேலாகக் காப்பாற்றுவேன். இதைத்தவிர இந்த சூழ்நிலையில் வேறு என்ன என்னால் எழுத முடியும். ஏற்பதும் நிராகரிப்பதும் தங்களதும் தங்கள் குடும்பத்தினரதும் விருப்பம்.

கடிதம் அஞ்சலில் அனுப்பப்பட்டது

கடிதம் பெண் வீட்டாரின் முகவரிக்கு அனுப்பப்படுகிறது. சில நாட்களில் பெண் வீட்டாருக்கும் மாப்பிள்ளையைப் பிடித்திருப்பதாகவும் ஆனால் பெண்ணும் மாப்பிள்ளையும் நேரில் சந்தித்துப் பேசியபின்பே முடிவு சொல்லமுடியும் என்றும் தெரிவிக்கிறார்கள்.

பெண் வீட்டினர் மிகவும் புத்திசாலிகள் போலும்.

போர் நடந்துகொண்டிருக்கிறது; மாப்பிள்ளை போர்க்களத்தில் நின்று கொண்டிருக்கையில் எப்படி மணம் பேசி முடிக்க முடியும். மணப்பெண் கோமதி, M.Sc,M.Ed படித்து பெண்கள் கல்லூரியில் ஆசிரியையாக இருக்கிறார். மாப்பிள்ளையை நேரில் பார்த்துப் பேசிய பின்பே முடிவெடுக்கலாம் என்ற அவரது பதில் மிகவும் சாதுரியமாக எடுக்கப்பட்ட முடிவு.

காலமெனும் காட்டாறு கரைபுரண்டு ஓடுகிறது.ஆழிப்பேரலை அதிர்ந்து கிளம்பும்போது சில பசுஞ் சோலைகளை அழித்து விடுகிறது;சில பாழிடங்களை பசுஞ்சோலைகளாக மாற்றி விடுகிறது. இயற்கை நடத்தும் எழில் நாடகங்களானவைகளை யார் தடுக்க முடியும்.

சென்னையிலிருந்து சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை வழியாக காரில் போகும் பயணிகள் பேரளம் சென்று இடதுபுறம் செல்லும் காரைக்கால் சாலையில் மேனாங்குடி வரை சென்று வலது புறம் திரும்பி சுமார் 2.கி.மீ.சென்றால் "செம்பிய நல்லூர் "என்ற எழில் மிகு கிராமத்தை அடையலாம்
அங்கு "அறிவை அறிவால் அறிந்துகொள்ளும் அறிவுத் திருக்கோவில்" என்ற விசாலமானப் பெயர்ப் பலகையும்,உள்ளே தொடர்ந்து சென்றால் நந்தவனம் போன்ற மலர்ச்செடி மரங்களுக்கிடையே ஒரு வசந்த மாளிகை போன்ற அழகான மாளிகையையும் அதன் வரவேற்பு அறையில்

"மோகனா நதிக்கரையிலிருந்து"
என்ற ஒரு பெரிதாக்கப்பட்டு கண்ணாடி சட்டம் போட்ட கடித நகலையும் பார்க்கலாம். ஓய்வு கிடைத்தால் குடும்பத்தோடு சென்று அங்கிருக்கும் மாமனிதர்களை சந்தித்து வாருங்கள்.

மனித வாழ்க்கை ஒரு மகத்தானப் பரிசு என்ற விளக்கம் கிடைக்கலாம்.

வாருங்கள்! பயணிப்போம்.

கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968