Col. Ganesan Satcos-Tamil Web Pages



கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள் -
Col.(Retd.) P. Ganesan




அகத்தூண்டுதல்கள்


புதன், 4 மே, 2016

மண்ணின் பெருமை.

மனித உடல் பஞ்ச பூதங்களால் ஆனது என்பது நாம் அறிந்ததே.

நிலம்,நீர்,நெருப்பு,காற்று, மற்றும் ஆகாயம் என்ற இந்த பஞ்ச பூதங்களில் நிலம் என்ற இந்த மண்ணே பெரும் பங்கு வகிக்கிறது. ஆகையினால் மனிதர்களின் செயலாக்கத்தில் மண் ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம் என நினைக்கிறேன்.அதாவது அவர்கள் பிறந்த மண். உலகம் முழுவதும் பிறந்த மண்ணுக்குப் பெருமை சேர்த்த மாமனிதர்கள் ஏராளமானவர்கள் இருந்தார்கள்-இருக்கிறார்கள்-இனியும் பிறந்து வருவார்கள்.

நல்ல விளைச்சல் வேண்டும் என்று எதிர்பார்க்கும் விவசாயிகள் முதலில் விலை நிலத்தைத் தயார்படுத்தவேண்டும் என்பதில் தவறுவதில்லை.துரதிர்ஷ்ட்டவசமாக விவசாயம் பற்றி ஏதும் தெரிந்துகொள்ளாமல் அல்லது ஏட்டறிவுடன் வயலில் இறங்குபவர்கள் என்ன விளைச்சல் கண்டுவிடமுடியும்?இயற்கையின் வரப்பிரசாதமாக எங்கோ வளமான மண்ணில் விழும் விதைகள் செழிப்பாக வளருவதுபோல் எங்கோ ஓரிரு மாமனிதர்கள் அவர்களது பூர்வ புண்ணிய பலனாகப் பிறந்து ஊரும் நாடும் பெருமைப் பெறச் செய்கிறார்கள்.

ஆனால்"மனம்" என்ற மண்ணை எண்ணங்கள் என்ற ஏர்பூட்டி மேலும் கீழும் புரட்டிஎடுத்து கல்வி,பெற்றோர்களின் நல்லாசி, நல்ல பழக்க வழக்கங்கள் போன்ற எரு எட்டு வெள்ளாமை காண யார்வேண்டுமானாலும் முயற்சிக்கலாம் என்பதுதான் இயற்க்கை நியதி.

மயிலாடுதுறைக்கு அருகில் நடுத்திட்டு என்ற கிராமத்தில் 11-7-1925 ல் ரங்கநாதன் என்ற ஆண்குழந்தை பெற்றோருக்கு நான்காவதாகப் பிறந்தான். சில நாட்களில் குடும்பம் "திருவேட்களம்" என்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அருகிலுள்ள ஊருக்கு இடம் பெயர்ந்தது. சிறுவன் ரங்கநாதன் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் வேங்கடசாமி நட்டார்,சர்க்கரைப்புலவர்,டாக்டர் ரா,பி.சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தரப் பாரதியார் போன்றோர்க்குப் பால் கொண்டு செல்வது வழக்கம்.மாலைநேரத்தில் கிராமப்புற வளர்ச்சிக்குச் செல்லும் விபுலானந்த அடிகளாருக்கு ஹரிக்கேன் விளக்கு எடுத்துச்செல்வான் .1942 ல் S.S.L.C. எழுதிய ரங்கநாதன் தேர்வில் தோல்வி யடைந்தான்.

இந்த ரங்கநாதன் தான் பிற்காலத்தில் தமிழகத்தின் தலைசிறந்த பசுமை புரட்சி கண்ட ஒரு மடாதிபதியானார் என்பது படிப்போர்களை வியப்படையவைக்கும்.

வாதாபி போரில் இரண்டாம் புலிகேசியை வெற்றி கொண்ட படைத்தலைவர் பரஞ்சோதி பின் நாளில் பிள்ளக்கறிசமைத்த சிறுதொண்ட நாயனார் என்று புகழ்பெற்ற ஊர் திருச்செங்கட்டான்குடி

சோழ மன்னனின் படைத்தலைவன் கருணாகரத் தொண்டைமானின் மாபெரும் கலிங்க வெற்றியை "கலிங்கத்துப் பரணி"என்ற காவியமாகப் படைத்தப் புலவர் செயங்கொண்டார் பிறந்த ஊர் தீபங்குடி.

இந்த இரண்டு ஊர்களும் இன்றைய திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது.இரண்டு ஊர்களுக்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 15 km.

இந்த இரண்டு ஊர்களுக்கும் இடையிலிருப்பது "சன்னாநல்லூர்"

இதுவே நாளை சரித்திரம் படைக்கப் போகிறது.

கர்னல் பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு ) 044- 2635 9906, 2625 1968